ஜவஹர்லால் நேரு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
|
1வது இந்தியப் பிரதம மந்திரி
|
|
---|---|
பதவிக் காலம் ஆகஸ்ட் 15, 1947 – மே 27, 1964 |
|
பின்வந்தவர் | குல்சாரிலால் நந்தா |
|
|
பிறப்பு | நவம்பர் 14, 1889 அலகாபாத், உத்தரப் பிரதேசம் |
இறப்பு | மே 27, 1964 |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
சமயம் | இந்து சமயம் |
பாரத ரத்னா ஜவஹர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியப் பிரதமர் ஆவார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போதும், அதற்குப் பின்னரும், இந்திய தேசிய காங்கிரசிலிருந்தவர்களுள் மிதமான சோஷலிசவாதிகளின் தலைவராகக் கருதப்பட்டவர். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது அதன் முதலாவது பிரதம மந்திரியாகப் பதவியேற்றார். 1964, மே 27 ல், காலமாகும் வரை அவரே இப் பதவியை வகித்து வந்தார்.
இவர் பிரபல காங்கிரஸ் தலைவராக இருந்த மோதிலால் நேருவின் மகனாவார். இங்கிலாந்தில் சட்டம் படித்தபின், சட்டத்தொழில் புரிவதற்காக இந்தியாவுக்குத் திரும்பிய இவர், தந்தையாரைப் பின்பற்றி அரசியலுள் நுழைந்தார். மகாத்மா காந்தியின் நிழலில் உருவாகிய நேரு, 1929 இல் முதல் தடவையாக காங்கிரஸ் தலைமைப்பதவியை ஏற்று இந்திய தேசிய அரசியலில் முதல் வரிசைத் தலைவர்களுள் ஒருவரானார்.
1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்குப் பின்னர் 32 மாதங்கள் சிறையிலிருந்த நேரு, 1946 ஜூலையில், 1947 இல் பாகிஸ்தானின் உருவாக்கத்துக்கு வித்திட்ட, தனிநாடு கோரிக்கையை முன்வைத்துப் போராடிய அனைத்திந்திய முஸ்லிம் லீக்கின், எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டின் முதலாவது அரசாங்கத்தை அமைத்தார்.
வெளிவிவகாரக் கொள்கையைப் பொறுத்தவரை நேரு அணிசேராமையைப் பின்பற்றினர். எனினும் காஷ்மீர் சம்பந்தமான பிரச்சினையில் 1947 - 1949 வரை பாகிஸ்தானுடன் முதலாவது காஷ்மீர் போரில் இந்தியா ஈடுபட வேண்டியேற்பட்டது. ஆயுதப்படை சம்பந்தமாகத் தனது விருப்பமின்மையை வெளிப்படுத்திவந்த இவர் ஹைதராபாத் (செப்டெம்பர் 1948), போத்துக்கீசர் ஆண்ட கோவா (டிசம்பர் 1961) என்பவற்றை வசப்படுத்திக்கொள்ள ஆயுதப்படையைப் பயன்படுத்த வேண்டியேற்பட்டது. 1962ல் மக்கள் சீனக் குடியரசுடன் ஏற்பட்ட போரில் இந்தியா பெற்ற தோல்வி, ஆயுதப் படையினரின் ஆயத்தமின்மை தொடர்பாகவும், சீனாவுடன் நட்புறவைக் கொண்டிருக்க விரும்பிய நேருவின் கொள்கை தொடர்பாகவும் கண்டனங்கள் எழுந்தன.
[தொகு] நேருவின் பொருளாதாரக் கொள்கை
நேரு, சோவியத் யூனியனின் ஐந்தாண்டுத் திட்டத்தினால் ஈர்க்கப்பட்டார். அதை இந்தியப் பொருளாதாரத்திலும் செயல்படுத்த முயன்றார். இந்தியா சோஷலிசம், முதலாளித்துவம் இரண்டினதும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நேரு விரும்பினார். இதனால் இந்தியாவில் ஜனநாயக சோஷலிசத்தை உருவாக்கினார். அரசே தொழிலதிபராகவும், அதன் மக்களனைவரும் சம பங்காளர்களாகவும் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். முறையான செல்வம் பரவலாக்க முறைமைகளை எல்லா மட்டங்களிலும் உருவாக்கியதன் மூலம், ஜனநாயகத்துக்கான அடிப்படைகளை வலுவாக்கினார். ஆனால் இத்தகைய முறைமையால் இந்தியா போன்ற மிகப்பெரிய நாடொன்றுக்குப் போதிய செல்வத்தை உருவாக்க முடியவில்லை. இது பொருளாதார மந்த நிலையையும், ஊழலையுமே வளர்த்தது. குருசரண் தாஸ் தானெழுதிய "India Unbound" (தளையற்ற இந்தியா) என்னும் நூலில் நேரு சகாப்தத்தைப் பின்வருமாறு குறிப்பிட்டார் - கேக்கைச் செய்வதற்கு முன்னரே விநியோகம் செய்தார்கள்.
[தொகு] சுவையான செய்திகள்
- நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14, இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- இவரின் மகள் திருமதி இந்திரா காந்தியும் பாரத பிரதமராக பணி புரிந்துள்ளார்
- இவரின் பேரன் திரு ராஜீவ் காந்தியும் பாரத பிரதமராக பணி புரிந்துள்ளார்