பான் கி மூண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பான் கி மூண், தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார். இவர் ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச் செயலாளராக ஆவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதய பொதுச் செயலாளர் கோபி அன்னான் ஓய்வு பெற்றவுடன், ஜனவரி 1, 2007 முதல் இவர் அப்பொறுப்பை ஏற்பார். இவர் ஜுன் 13, 1944 அன்று கொரியாவின் சுங்ஜு நகரத்தில் பிறந்தவர்.
[தொகு] கல்வி
பான் கி மூண் 1970ஆம் ஆண்டு சியோல் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து, பன்னாட்டு உறவுகள் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1985ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஜான் எப் கென்னடி அரசாட்சிப் பள்ளியிலிருந்து பொது ஆட்சி பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
[தொகு] பணிகள்
தென் கொரியாவின் இந்தியத் தூதரகத்தில் முதன் முதலாகப் பணியில் சேர்ந்த மூண், கொரிய வெளியுறவுத்துறையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டோடு நின்று போன வட கொரிய அணு ஆயுத உற்பத்தி சம்பந்தமான ஆறு நாடுகள் பேச்சுவார்த்தையிலும் இவர் பங்காற்றினார்.
[தொகு] பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டி
பான் கி மூண், ஐ. நா. பொதுச் செயலாளர் பதவிக்கு நடைபெற்ற நான்கு (உறுப்பினர் விருப்பமறியும்) தேர்வுகளிலும் முதலாவதாக வந்தார். இரண்டாவதாக வந்த இந்தியாவின் சசி தரூர் உள்ளிட்டோர் படிப்படியாகப் போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ஐ. நா. பாதுகாப்பு அவை இவரை முறைப்படி தெரிவு செய்து பொதுச் சபைக்கு சிபாரிசு செய்துள்ளது. இத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது இவரும், தென் கொரிய அரசும் பணபலத்தை பயன்படுத்தி ஏழை நாடுகளின் ஆதரவைப்பெற முயற்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தகுந்தது.