பறைமேளக் கூத்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பறைமேளக் கூத்து பறையர் சமூகத்தினரால் மட்டக்களப்பில் அளிக்கை செய்யப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய கலை வடிவமாகும். பறைமேளக் கூத்து பறையர் சமூகத்திற்குரியதாக விளங்கியதற்குக் காரணம் அது அந்தச் சமூகத்தினரின் பிழைப்பூதியத் தொழில் முயற்சியின் ஒரு பகுதியாக இணைந்திருந்தமையாகும்.
ஈழத்தின் சமூக அமைப்பில் பறையர் சமூகம் இணையாக ஏற்கப்படாத (அங்கீகாரம் அற்ற) சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். பறையடித்தல் இவர்களின் குலத் தொழிலாகும். பறையடித்தல் மூலமே தங்களுக்கான பிழைப்பூதியத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். பறையடித்தலை ஆலய நிகழச்சிகள், மரண வீடுகள் என்பனவற்றில் அளிக்கை செய்தனர். ஆலய முன்றல், பிண (பிரேத) ஊர்வலம் என்பனவற்றின் போதும் பறைமேளக் கூத்தினை அளிக்கை செய்வது வழக்கம். பிண (பிரேத) ஊர்வலத்தின் போது பறைமேளக் கூத்தின் சில பகுதிகள் "சந்தி மறித்து ஆடுதல்" என்னும் பெயரில் இடம்பெறும்.
மட்டக்களப்பில் அளிக்கை செய்யப்படும் பாரம்பரிய கலை வடிவங்களில் மத்தளம், சல்லரி என்னும் இசைக்கருவிகளே (வாத்தியங்களே) பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பறைமேளக் கூத்தில் பயன்படுத்தப்படும் பறை, சொர்ணாலி என்பன பாரம்பரிய அரங்க வடிவங்கள் எவற்றிலும் பாவிக்கப்படுவதில்லை. இவை பறைமேளக் கூத்திற்கே தனிச்சிறப்புடைய இசைக்கருவிகளாகக் (வாத்தியங்களாகக்) கொள்ளப்படுகின்றன.